Archives: Episodes

  • நிலவை தொலைத்த வானம் – 3.2

    “வாங்க, வாங்க… வாம்மா…” என்று சீதா, சரசு, தேவி அனைவரும் அவர்களை வரவேற்றனர்.

    “எப்படி இருக்க, அற்புதம்? கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது?” என்ற லட்சுமியின் பார்வை முழுக்க வெண்பாவிடம் தான் இருந்தது.

    “நல்லா போகுது ம்மா.. ஆனா உங்களை தான் நிச்சயத்துல பார்க்க முடியலை, முக்கியமான கல்யாணம்னு சம்பந்தியம்மா சொன்னாங்க.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுங்களா?”

    “அதெல்லாம் ரொம்ப நல்லாவே முடிஞ்சது..” என்றவர், “சரசு ஜூஸ் கொண்டு வா…” என்றவர் விஸ்தாரமாக இருந்த போர்டிகோவில் அற்புதத்தோடு அமர்ந்து பேச அவரருகே அமர்ந்தாள் வெண்பா. 

    “இவ என்னோட கடைசி பொண்ணு மா.. நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..” என்று அற்புதம் சொன்ன அதே நேரம் அங்கே வந்த தேவி, “எப்படி இருக்க வெண்பா? அக்காவை பெண் பார்க்க வந்தப்போவே வேலைக்கு போன நீ இன்னைக்கு வருவன்னு நான் எதிர்பார்க்கலை..” என்றார் ஆர்ப்பாட்டமான குரலில்.

    “நல்லா இருக்கேன், அத்தை. அண்ணன்கள் எல்லாம் வேலையா இருக்காங்க அம்மா மட்டும் தனியா வர முடியாதுன்னு இன்னைக்கு அகாடமிக்கு லீவ் எடுத்தேன்..” என்று புன்னகையோடு பதில் சொன்னாள்.

    என்ன தான் ஷோபாவின் மாமியார் சீதாவாக இருந்த போதிலும் நிச்சயத்தில் தேவியிடம் வெண்பாவிற்கு நல்ல பரிட்சயம் ஏற்பட்டு இருந்தது.

    “வீட்ல மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்க? அண்ணன்கள் இல்லைன்னா என்ன உன் சின்ன அண்ணி, குழந்தைகளையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாமே?”

    “இல்லை, அத்தை. அண்ணியோட நெருங்கிய சொந்தத்தில் விசேஷம். அதுக்கு அண்ணனும் அண்ணியும் போயிருக்காங்க…” என்று தேவி கேட்ட கேள்விகளுக்குப் நிதானமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அற்புதத்துடனான பேச்சை நிறுத்தி விட்டு இவர்களின் பேச்சை கவனித்து கொண்டிருந்த லட்சுமியைச் சுட்டிக் காண்பித்து “இவங்க யாருன்னு தெரியுதா?” என்று கேட்டார் தேவி.

    “இவங்க உங்களுடைய பெரிய அக்கா தானே, அத்தை?” என்றவள், லட்சுமிக்கு நமஸ்காரம் செய்தாள்.

    “நீ கற்பூரம் மாதிரின்னு ஷோபா சொன்னா வெண்பா… அது நிஜம்தான் போல!” என்று சிரிப்போடு சொன்னார் தேவி.

    “உங்களை, சரசு அத்தையை, சீதா அத்தையை நிச்சயத்திலேயே மீட் பண்ணியிருக்கேன். அன்னைக்கு மிஸ் ஆனது பெரிய அத்தை தான். அப்போ அவங்க தான்… இவங்கன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லை, அத்தை…” என்று இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், ஹாலில் இருந்து ‘வீல்’ என்று குழந்தை அழும் சத்தம் கேட்டது.

    “என்ன ஆச்சு?” என்று அவர்கள் ஹாலுக்குச் செல்ல, அங்கே கண்மணியின் அக்கா குழந்தை அழுது கொண்டிருந்தது.

    “என்னம்மா ஆச்சு?” என்றார் லட்சுமி.

    “பாருங்க, அத்தை… புது டிரஸ் எல்லாத்துலயும் மை பூசி வச்சுட்டா. கொஞ்சம் கூட அடங்குறது கிடையாது. எவ்வளவு நேரம் தான் நானும் இவளைப் பிடிச்சு வைக்கிறது? கொஞ்சம் அசந்தா இந்த மாதிரி எதையாவது பண்ணி வச்சிடுறா. விசேஷ நாள் அதுவுமா, இப்படி கருப்பு பூசி வச்சிருக்காளே…” என்றாள் ஆதங்கத்தோடு.

    “அக்கா, விடு க்கா. நான் தான் பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்ல..” என்று கண்மணி சொல்ல,

    “என்னடி பேசற நான் வாங்கிட்டு வந்த ட்ரெஸ்ஸா இருந்தாலும் பரவால்ல ஆனா மத்தவங்க குழந்தைக்குக் கொடுக்கறதுக்காக வாங்கிட்டு வந்த டிரஸ்சை அலங்கோலமாக்கி இருக்கா…” 

    “அவ இவ்ளோ செய்யற வரைக்கும் நீ என்ன பண்ணிட்டு இருந்த?” என்று கேட்டார் அவர் அன்னை.

    “நான் இவளுக்கு சாப்பாடு எடுக்க போயிருந்தேன் ம்மா அதுக்குள்ள சேர் போட்டு ஏறி, டேபிள் மேல இருந்ததை எடுத்து, பிரிச்சு வச்சுட்டா…” என்றவள் கண்கள் குளம் கட்டிப் போய்விட்டன.

    பின்னே, குழந்தை இப்படி செய்து விட்டதை கண்ட பெண் ஒருவர்,

    “எந்நேரமும் ஃபோனை கையில வச்சுகிட்டு குழந்தையை ஒழுங்கா வளர்க்காமல் இஷ்டத்துக்கு விட்டா இப்படித்தான் ஆகும்!” என்று முகம் சுளித்ததை கார்த்திகாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    “எவ்ளோ சொன்னாலும் கேட்கிறதே இல்லை. இவளால எனக்கு தான் கெட்ட பேர்..” என்று மீண்டும் குழந்தையை அடிக்க போக உடனே கார்த்திகாவை தடுத்து குழந்தையை தன் புறம் இழுத்து கொண்ட வெண்பா,

    “என்னங்க இது? குழந்தைக்கு என்ன தெரியும்? இது விளையாட்டு வயசு போக போக நாம எடுத்து சொன்னா புரிஞ்சுக்கப் போறாளா?”

    “நீ வேற மா… இதையே நான் சொன்னா எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க. நாம தான் கண்டிச்சு வளர்க்கணும், நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க…”

    “கண்டிக்கலாம் க்கா. ஆனா தண்டிக்கிறது எந்த விதத்துல சரியாகும்? அதை விட, இன்னைக்கு அவ செஞ்சது ரொம்ப நல்ல விஷயம் அதை புரிஞ்சுக்கோங்க..”

    “எது? புதுத் துணியில் எல்லாம் மை பூசி வச்சதா?”

    “ஆமா, இன்னைக்கு விசேஷமே குழந்தைக்கானது. இவ்ளோ பேர் குழுமி இருக்கோம். நிச்சயமா குழந்தை மேல எத்தனையோ கண்ணு பட்டிருக்கும். அது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, இவ திருஷ்டி கழிச்சுட்ட தான் நினைச்சுக்கோங்க.” என்று சொல்ல, லட்சுமி உட்பட அனைவரும் ஆச்சரியமாக அவளைப் பார்த்தனர்.

    “என்னம்மா சொல்ற?”

    “நம்ம குழந்தைகளுக்கு மையில திருஷ்டி பொட்டு வைக்கிறது இல்லையா? அப்படி தன் தம்பி மேல எந்தத் திருஷ்டியும் பட்டுடக் கூடாதுன்னு டிரஸ்ல வச்சிருக்கான்னு எடுத்துக்கோங்க…” என்று சொல்ல லட்சுமி இந்த வயதில் வெண்பாவின் பார்வையையும் பக்குவத்தையும் கண்டு வியந்திருந்தார்.

    “ஆனாலும்..” என்ற கார்த்திகாவை இடையிட்டு, “இது என்ன அழிக்க முடியாத கறையா? ஒரு முறைக்கு இரண்டு முறை தோய்ச்சா போயிடப் போகுது. அதுக்காகக் குழந்தையை அடிக்கிறது நல்லாவா இருக்கு?” என்று தயக்கத்துடனே கூறினாள்.

    “வெண்பா சொல்றது ரொம்ப சரி! நாம பார்க்கிற கோணத்துல தான் இருக்கு சரியும் தப்பும். குழந்தையை விட துணி பெருசாமா? இந்தத் துணி போனா இன்னொன்னு வாங்கிக்கலாம்…”

    “அத்தை..”

    “ஆமா கார்த்திகா ஆனா, குழந்தையோட மனசுல இந்தக் காயம் ஆறாத வடுவா பதிஞ்சிருச்சுன்னா, அப்புறம் அவ தன்னுடைய இயல்புல இல்லாம, நத்தையா சுருண்டுக்குவா. நாமளே நம்முடைய குழந்தைக்கு இப்படி செய்யலாமா?” என்றார் லட்சுமி.

    “ஸாரி, அத்தை. இவ பண்ற அட்டகாசத்துல எனக்கு குழந்தை வளர்ப்பு தெரியலன்னு அடிக்கடி ஏதாவது எங்க அத்தை சொல்லிடுவாங்க. அதனால இவளை அடிக்கடி அடிச்சுக் கண்டிச்சு வைப்பேன். இனி அப்படி நடந்துக்க மாட்டேன்..” என்று தன் தவறை உணர்ந்து சொன்னவள்,

    “என்கிட்ட வா, அம்மு…” என்று குழந்தையை அழைக்க, அவளோ பயந்து போய் வெண்பாவின் தோளில் சாய்ந்து முகம் புதைத்து கொண்டாள்.

    அதை கண்டவளின் முகம் சுணங்கி போனது 

    கார்த்திகா இதுநாள் வரை குழந்தையை இந்த அளவு அடித்தது கிடையாது. தங்கையின் புகுந்த வீட்டு விசேஷத்தில் இப்படி செய்து விட்டதால், அவளுக்கும் பிரச்சனையாகி விடுமோ என்ற பயமே குழந்தையைச் சற்று வேகமாக அடிக்கச் செய்திருந்தது.

    “நீங்க தப்பா எடுத்துக்காட்டி இவளை கொஞ்ச நேரம் நான் வச்சிருக்கட்டுமா? நார்மல் ஆனதும் கொண்டு வரேன்..” என்ற வெண்பா, குழந்தையோடு திரும்பிய அதே நொடி, வாசலில் சாய்ந்து இரு கரங்களையும் கட்டியபடி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

    “அடடே, கௌதம்! வாப்பா… வா, வா…” என்று மற்றவர்கள் வரவேற்க, வெண்பாவோ தன் போக்கில் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு வெளியில் சென்றாள்.

    கௌதமை அனைவரும் சுற்றிக்கொள்ள அவர்களுக்கு பதில் அளித்து முடித்தவன், “விசேஷத்துக்கு கூப்ட்டுட்டு இன்னும் ஆரம்பிக்காம இருக்கீங்க?” என்றான் புன்னகையோடு. 

    “நீ வந்ததே பெரிய விசேஷமா பார்க்கிற அளவுக்கு நீ தான் மாத்திட்ட கௌதம். அடிக்கடி வந்து போனா தானே?!” என்று தேவி கேட்க அடுத்த பதினைந்து நிமிடத்தில் விசேஷம் தொடங்கியது. 

    பிரசாந்த், கண்மணியின் குழந்தைக்கு ஹரிஹரன் என்ற பெயர் சூட்ட, அதைத் தொடர்ந்து குழந்தைக்கு உடைகள், பரிசுப் பொருட்கள் என்று கொடுக்கத் தொடங்கினர்.

    அடுத்த நொடியே கௌதமின் சித்தி பிள்ளைகள் அவனை அழைத்து சென்று விட்டனர். 

    “வெண்பாக்கு வரன் ஏதாவது வந்திருக்குங்களா அண்ணி?” என்று மெல்ல பேச்சை தொடங்கினார் தேவி.

    “அத்தை சாப்பிடுவீங்க வாங்க.. நீயும் வா வெண்பா..” என்று அழைத்தான் பிரபு.

     “வரேன் மாப்பிள்ளை..” என்றவர் “நீங்களும் வாங்க..” என்று தேவியோடு பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றார். 

    உணவை முடித்து கொண்டு வந்தவர்களை பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து செல்வதற்காக மீண்டும் பிரபு வர, “வேலை நிறைய இருக்கு, நீங்க பாருங்க மாப்பிள்ளை.. நாங்க கிளம்புறோம்..” என்றார் அற்புதம். 

    “இருக்கட்டும் அத்தை..” என்ற நேரம், “எனி ஹெல்ப் பிரபு?” என்று கேட்டபடி அங்கே வந்தான் கௌதம்.  

    “ஆமாண்ணா, இவங்களை பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணனும்..” என்றவன் “அத்தை இவங்க என்னோட லட்சுமி பெரிம்மாவோட பையன் கௌதம் அண்ணன். இவர் உங்களை டிராப் பண்ணிடுவாரு..”

    “பராவல்ல இருக்கட்டும் அவருக்கு எதுக்கு சிரமம்..” என்று வெண்பா மறுக்க, “அப்படி எதுவும் இல்லை வாங்க போகலாம்..” என்று கௌதம் அழைக்க அதற்கு மேல் அவர்களால் மறுக்க முடியவில்லை. 

    காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து நிலவிய அமைதியை ஒருகட்டத்தில் உடைத்த கௌதம் தானே பேச்சை தொடங்கினான். 

    அவன் கேள்விக்கு பதிலளித்த அற்புதம் ஒருகட்டத்தில் அவனிடம் தயக்கம் இன்றி பேச தொடங்கினார். 

    பஸ் ஸ்டாப் வரவும் இறங்கி கொண்டவர்கள் அவனிடம் விடைபெற்று அவர்களின் பேருந்தில் ஏறி கொண்டனர். 

    வாகனம் கிளம்பும் நேரம் “அத்தை தண்ணீ..” என்று குடிநீர் பாட்டிலை அவரிடம் கொடுத்த கௌதமின் பார்வை நொடிக்கும் குறைவாக வெண்பாவை தீண்டி செல்ல அவளோ அதை அறியவில்லை. 

    “ரொம்ப நல்ல தம்பி இல்லை வெண்பா..” என்று அற்புதம் கேட்க, 

    “என்னம்மா நீ?! முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இருக்க?

    “அவர் மாப்பிள்ளையோட அண்ணன்டி..”

    “அதுக்காக?! இன்னைக்கு தான் முதல் முறையா பார்க்கிறவங்க கிட்ட இவ்ளோ பேச்சு தேவையா?” என்றவளுக்கு அவள் அக்கா சுசிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது. 

    பேசி முடித்தவளிடம், “சுசிலா என்ன மா சொன்னா?” என்றார்.

    “எல்லாம் கல்யாண விஷயமா தான் பேசினாங்க..” என்றவள்,

    “ம்மா ஒருவேளை பெரிய அண்ணா, கல்யாணத்துக்கு நாம எப்படி பணம் ஏற்பாடு பண்ணி இருக்கோம்னு கேட்டா, அதைப் பற்றி எனக்குத்தான் தெரியும்னு சொல்லிடுங்க. நீங்களா எந்த வார்த்தையும் விட்டுடாதீங்க, அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க.” என்றவளை புரியாமல் பார்த்தார் அற்புதம்.

  • நிலவை தொலைத்த வானம் – 3.1

    பஸ்ஸில் அமர்ந்திருந்த வெண்பாவிடம், “நமக்கு நேரமில்லை வெண்பா, ஷோபாவுக்கு நம்ம பக்கம் இருந்து புடவை, துணிமணி, நகைன்னு எடுக்க வேண்டியது இருக்கு..”

    “நியாபகம் இருக்கு ம்மா.. பத்திரிகை வந்துட்டா நமக்கு இதுக்கு நேரமே இருக்காது அதுதான் வர வாரம் அவளை கூட்டிட்டு போயிட்டு வந்துடலாம்.. அப்படியே சீர் வரிசை எடுக்க போற கடையையும் பார்த்துட்டு வந்துடலாம்..” என்று சொல்ல, அவளுக்கு ஜானகியிடம் இருந்து அழைப்பு வந்தது.

    “சொல்லுங்க க்கா, எப்படி இருக்கீங்க?”

    “நான் நல்லா இருக்கேன்டி. இன்னைக்கு உங்க மாமா கூட நானுமே வரணும்னு தான் முடிவு பண்ணேன். என்ன பண்ண? பாரதியோட குழந்தைக்கு முடி இறக்கிறதால எங்களால தவிர்க்க முடியல…”

    “எனக்குப் புரியுது கா. இன்னைக்கு இல்லைன்னா என்ன? இதுக்கு அடுத்து வரப்போற விசேஷத்தில் கலந்துக்கோங்க..”

    “ஆனாலும் அம்மாவையும் உன்னையும் மட்டும் அனுப்பி வைக்கிறதுல எனக்கு மனசே கேட்கலடி.”

    “ப்ச் திரும்ப திரும்ப இதையே எத்தனை முறை தான் சொல்லுவ?! அம்மா எதுவும் குறையா நினைக்கலை நான் பேசிட்டேன்..” 

    “சரி, சித்ரா கிட்ட பேசுனியா? அவளும் அவ புருஷனும் வந்து இருந்தாலாவது எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும்…”

    “இல்லக்கா. அவங்களுக்கு அவங்க மாமியாரோட மன்த்லி செக்கப் இருக்கு. மாமா வெளியூர் போயிருக்கிறதால அக்கா தான் கூட்டிட்டுப் போகணும். முடியாதுன்னு சொன்னாலோ ஒத்திப்போட நினைச்சாலோ நிச்சயமா பிரச்சனையாகும். அதனால தான் அவங்களாலயும் வர முடியல…” என்றவள், 

    “சரி, அம்மா பேசணும்னு சொல்றாங்க. பேசு க்கா” என்ற பதில், அற்புதத்திடம் கைபேசியைக் கொடுத்தாள்.

    அதேநேரம் “கண்மணி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா? நல்ல நேரம் முடியறதுக்குள்ள குழந்தையை கூட்டிட்டு வர சொல்லு சீதா..” என்றார் லட்சுமி.

    “குழந்தை இப்ப தான் எந்திரிச்சான் பசியாத்தி கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன்.. வந்துருவா. தொட்டில் அலங்காரம் எல்லாம் சரியா இருக்கா இல்ல வேற ஏதாவது தேவையான்னு பார்த்து சொல்லுங்க க்கா..” என்றார் லட்சுமியின் மூன்றாம் தங்கை சீதா. 

    “உன்னோட பட்டு புடவை இருந்தா ஒன்னு கொடு சீதா,  தொட்டில்ல விரிக்கணும்..” என்றதுமே கொண்டு வந்து கொடுத்தார்.

    70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் லட்சுமி பட்டுப் புடவையை அழகாக மடித்து தொட்டிலில் விரித்தார்.

    “இப்போ பலூன் கட்டலாமா பெரியம்மா?” என்றான் பிரசாத்.

    “கட்டுப்பா..” என்றவர் அப்போது தான் வெளியில் கிளம்பி கொண்டு இருந்த பிரபுவிடம் “விசேஷம் ஆரம்பிக்க போகுற நேரத்துல எங்க கிளம்பிட்ட பிரபு?” என்றார்.

    “ஷோபாவோட அம்மாவும் தங்கச்சியும் பஸ்ல வந்துட்டு இருக்காங்க பெரிம்மா.. அதுதான் அவங்களை கூட்டிட்டு வந்துடலாம்னு கிளம்பிட்டு இருக்கேன்..”

    “அப்படியா?! ரொம்ப சந்தோஷம், சீக்கிரம் கூட்டிட்டு வா ப்பா..” என்றவருக்கு தன் மகனிடம் இருந்து அழைப்பு வந்தது.

    கௌதம் என்றவரின் குரலில் அத்தனை கனிவு கொட்டி கிடந்தது.

    இருக்காதா பின்னே?!.. அவருக்குத் திருமணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்து பதினைந்து வருடங்களுக்கு பின்னர் தவமாய் தவமிருந்து பெற்ற ஒற்றை மகனல்லவா?!…

    அதிலும் பெற்றோர் மீது கொள்ளை பாசம் கொண்டிருப்பவன்.

    ‘பிள்ளை இல்லையே..’ என்று ஏங்கிய நாட்களின் வேதனை தீர்க்க வந்தவன் இப்போது அவர்களின் தீரா வேதனைக்கு காரணமாகி போய் இருப்பது தான் விந்தையிலும் விந்தை.

    பின்னே! முப்பத்தி மூன்று வயதை நெருங்கி கொண்டிருக்கும் மகன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது எந்த பெற்றோருக்கு தான் மகிழ்ச்சியை கொடுக்கும்?!..

    இத்தனைக்கும் சீராட்டி பாராட்டி வளர்த்த பெற்றோரை மற்றவர்கள் மெச்சும் படி நடந்து கொள்பவன் ஏனோ திருமண விஷயத்தில் மட்டும் இன்று வரையிலும் பிடி கொடுக்காமல் இருக்கிறான்.

    எந்த விசேஷத்திற்கு சென்றாலும் நாராயணன் லட்சுமி தம்பதியினர் தவறாமல் எதிர்கொள்ளும் ஒரே கேள்வி ‘கௌதமுக்கு எப்போ கல்யாணம்?’ என்பது தான்.

    அதையும் தாண்டி சில உறவுகள் ‘இந்த காலத்து பசங்களுக்கு கல்யாணத்து மேல அப்படி என்ன தான் வெறுப்போ தெரியல… தெருவுக்கு நாலு பேரு இப்படித்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றாங்க, அவங்க சொல்றாங்களேன்னு நீங்க இப்படியே விட்டுடாதீங்க..’

    ‘அவனுக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா?!.. வேலை வேலைன்னு பறந்துட்டு இருக்கிறவனுக்கு நாம தான் எடுத்து சொல்லணும்..’ என்று ஆளாளுக்கு அறிவுரைகளை வாரி வழங்குவார்கள்.

    மகனுக்கு திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று இவர்களுக்கு மட்டும் ஆசையா என்ன?!.. 

    கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக கௌதமிடம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர், ஆனாலும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான்.

    அவனுக்கு உடலில் ஏதாவது கோளாறு இருக்கப் போகிறது என்று வேறு அவர்களை பயமுறுத்து இருந்தனர். 

    ‘இதை பற்றி எப்படி மகனிடம் பேசுவது’ என்று புரியாமல் அதை எண்ணியே கடந்த சில வருடங்களாக  நாராயணன் மற்றும் லட்சுமி அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

    லட்சுமி எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் கணவர் நாராயணன் 80 வயதை நெருங்கி கொண்டிருக்கிறார்.

    இந்நேரம் கொள்ளுப்பேரன் பேத்தி பார்த்திருக்க வேண்டிய வயதில் இன்னும் பேரன் பேத்திக்கே வழியில்லாமல் இருக்கின்றனர்.

    ‘இதுதான் காரணம்’ என்று கெளதம் சொல்லிவிட்டால் கூட அதற்குண்டான பரிகாரமோ அல்லது தீர்வோ அவர்கள் காணலாம்.. ஆனால் காரணமே சொல்லாமல் அவன் மழுப்பும் நிலையில் அவர்களும் என்னதான் செய்ய?!…

    இதோ லட்சுமியின் மூன்றாம் தங்கையான சீதாவின்  மகன் பிரசாந்த் கௌதமை விட கிட்டத்தட்ட ஆறு மாதம் இளையவன். ஆனால் உரிய வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறான். 

    இன்று அவனது இரண்டாம் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்காக தான் வந்திருக்கின்றனர்.

    தங்கை வீட்டிற்கு வந்தது முதலே வழக்கமான கேள்விகளை எதிர்கொண்டு இப்போது தான் ஓய்ந்து அமர்ந்திருக்கிறார் லட்சுமி.  

    அதேநேரம் “அக்கா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..” என்று அவர் அருகே அமர்ந்தார் லட்சுமியின் இரண்டாம் தங்கை தேவி.

    “நான் என்னைக்கு தப்பா எடுத்திருக்கேன்? எதுக்கு இவ்ளோ தயக்கம்? எதுவா இருந்தாலும் சொல்லு தேவி..” என்ற அதேநேரம் அவரின் முதல் தங்கை சரஸ்வதி அவர்களுக்கு டீ கொண்டு வந்தார். 

    “எனக்கு வேண்டாம் சரசு, உன் மாமாவுக்கு கொடு..” என்றவர், “சொல்லு தேவி” என்றார். 

    “உன்னோட வருத்தம் எனக்கு புரியாம இல்ல க்கா.. என் பையனுக்கு கல்யாணம் முடிச்ச கையோட சம்பந்தி விட்டு பக்கம் ஒரு பொண்ணு இருக்கு, நம்ம வசதிக்கு ஏற்ற படி இருக்காங்க… கௌதமுக்கு பார்க்கலாம்னு சொன்னேன்..” என்றவரை இடையிட்டு,  

    “அதுதான் கௌதம் அந்த பெண்ணை வேண்டாம்னு சொல்லிட்டானே.. நாம என்ன பண்றது?” என்றார் வருத்தத்தோடு 

    “எனக்கும் தெரியும் க்கா. ஆனா இப்பல்லாம் முப்பது வயசுக்கு முன்னாடி பசங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்கிறாங்க.. கேட்டா செட்டில் ஆகணும்னு சொல்றாங்க..”

    “அப்படி என்ன தான் செட்டிலோ தெரியலை.. அதேநேரம் இந்த பொண்ணுங்க பசங்களுக்கு முப்பது வயசுன்னு சொன்னாலே அங்கிள் என்று பட்டம் கட்டி வேண்டான்னு சொல்லிடுதுங்க..”

    “என்ன சொல்ற தேவி?..”

    “ஆமாக்கா முப்பது தாண்டிட்டாலே பசங்களுக்கு கல்யாணம் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு, இதுல கௌதமுக்கு முப்பத்தி மூணு இன்னும் ரெண்டு வருஷம் போனா எந்த பொண்ணுமே கட்டிக்க மாட்டாக்கா..”

    “என்ன தான் கௌதம் பார்க்கிறதுக்கு முப்பத்தி மூணு மாதிரி தெரியலைன்னாலும் நாம சும்மா இருந்திட முடியாதே.. நம்ம குடும்பத்துல அடுத்த தலைமுறையை சேர்ந்த குழந்தைங்க எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு…”

    “இதோ நம்ம பிரபுவும் சீக்கிரம் குடும்பஸ்தன் ஆகிடுவான், ஆனா கௌதம் மட்டும் இப்படி இருக்கிறது கஷ்டமா இருக்கு க்கா..” என்ற தங்கையை வாஞ்சையோடு பார்த்த லட்சுமி,

    “நானும் எவ்ளோ பரிகாரம் தான் பண்ணட்டும் தேவி..”

    “எந்த பரிகாரமும் கௌதம் கிட்ட வேலைக்கு ஆகாதுன்னு புரிஞ்சுடுச்சு க்கா.. மூணு வருஷமா பிரபுவுக்கு எந்த பொண்ணும் அமையாம போனதுல மகன் முப்பதை நெருங்கவும் சீதா வயசு, வசதி, வாய்ப்புன்னு எதையும் பார்க்காமல் பெண்ணையும் குணத்தையும் மட்டும் பார்க்க சொன்னா..”

    “இப்போ அவ கேட்ட மாதிரி நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு. ஷோபாவுக்கும் பிரபுவுக்கும் ஒரு வயசு தான் வித்தாயசம். இனியும் தாமதிக்க வேண்டான்னு அவங்களை விடவும் வசதியில குறைவான இடத்துல சம்பந்தம் பேசி இருக்கா..” என்ற தேவி மட்டுமல்ல அவர் சகோதரிகள் அனைவருமே வசதியான குடும்பத்தில் வாக்கப்பட்டு இருப்பவர்கள். 

    அதோடு ஈரோட்டில் பரம்பரை பரம்பரையாக ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களின் தந்தை ஜானகிராமன் பெரும் செல்வந்தர் என்பதால் நான்கு பெண்களுக்குமே வீடு, தோட்டம், தொறவு என்று  அனைத்தையும் சரிசமமாக சொத்துக்களை பிரித்து கொடுத்து விட்டார். 

    அதனால் லட்சுமி முதல் சீதா வரை யாருக்குமே பணத்திற்கு பஞ்சமில்லை. 

    அதேநேரம் சரஸ்வதி முதற்கொண்டு சீதா வரை அனைவரின் பிள்ளைகளும் திருமணம் முடித்திருக்கும் நிலையில் கௌதம் இப்படி தனித்து இருப்பது அவர்கள் அனைவருக்குமே கவலை அளித்தது.

    “க்கா நம்ம பிரபுவுக்கு பார்த்திருக்கிற ஷோபனாவுக்கு ஒரு தங்கச்சி இருக்கா.. பேர் வெண்பா வயசு இருபத்தி ஏழோ, எட்டோ சொன்னாங்க.. சரியா தெரியல ஆனா நம்ம கௌதமுக்கு பொருத்தமா இருக்கும்.. நீ சரின்னு சொன்னா பார்க்கலாம்..”  

    “அப்படியா? பொண்ணுங்க நாலு பேருன்னு சொன்னதுல நான் மூணு பேரும் மருமகளுக்கு பெரியவங்கன்னு நினைச்சேன் தேவி..”

    “இல்லை க்கா வெண்பா தான் கடைசி. மாநிறமா இருந்தாலும் மூக்கும் முழியுமா அழகா லட்சணமா இருப்பா, பார்க்க.. வயசு இருபத்தி ஏழு, இருபத்தி எட்டு இருந்தாலும் பார்க்க இருபத்தி இரண்டை தாண்டின மாதிரியே தெரியாதுன்னா பார்த்துக்கோ.. நம்ம கௌதமுக்கும் வெண்பாவுக்கும் ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கும்..” என்றவர், 

    “மாமா பக்கம் ஏதோ முக்கியமான கல்யாணம்னு நிச்சயத்துக்கு நீங்க வரலையே தவிர ஷோபனாவை பொண்ணு பார்க்கிறதுக்கு சீதா கூட போயிருந்த தானே?!..” 

    “ஆமா தேவி அன்னைக்கு ஷோபனாவோட ஒரு அக்கா, அண்ணன் அண்ணியை தான் பார்த்தோம் மத்தவங்க யாரையும் பார்க்க முடியலை..” என்றார் லட்சுமி.

    “அன்னைக்கு மட்டுமில்லை க்கா, நாங்க வீடு பார்க்க போன போதும் வெண்பா வேலைக்கு போயிருந்தா.. நாங்க கிளம்பும் போது தான் வந்தா பஸ்ல எறிட்டதால சரியா கவனிக்கலை.. நானே நிச்சயத்துல தான் அவளை பக்கத்துல பார்த்தேன்…”

    “சும்மா சொல்லலை க்கா நிஜமாவே அழகு, நல்லா படிச்சிருக்கா, அவங்க வீட்டுலயே இவ தான் புத்திசாலின்னு ஷோபாவே சொன்னா க்கா.. வெண்பாவை பார்த்தா நிச்சயம் நீயே ஒத்துப்ப. வசதி வாய்ப்பை பெருசா எடுத்துக்காம வெண்பாவையே நம்ம கௌதமுக்கு பார்க்கலாமே..” என்றார் ஆவலாக. 

    “அப்பா இல்லையேன்னு யோசிக்காத, அவர் இல்லாட்டியும் அம்மாவோட வளர்ப்புல பொண்ணுங்க ரெண்டுமே தங்கமா இருக்குங்க, குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம்..” என்றதில் லட்சுமியிடம் ஒரு பெருமூச்சு வெளியேறியது.

    “கண்டிப்பா நாம கேட்டா அவங்க மறுக்க போறது கிடையாது.. அதனால கேட்டு பார்க்கலாம் க்கா..” 

    “எனக்கும் ஆசையா தான் இருக்கு, ஆனா கௌதம் தான் என்ன சொல்வான்னோ தெரியலையே?!..” 

    “அதை அப்புறம் பாத்துக்கலாம்.. ஷோபனாவுக்கு கல்யாணம் முடியவும் வெண்பாவுக்கு பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க அதனால் நாம எதுக்கும் ஒரு வார்த்தை காதுல போட்டு வைக்கலாம்..” 

    “சரி தேவி நான் உங்க மாமா கிட்ட பேசுறேன்..” என்ற அதே நேரம் பிரபு அற்புதம் மற்றும் வெண்பாவோடு அங்கு வந்து சேர்ந்தான்.

    அளவான ஒப்பனை அலட்டல் இல்லாத பாவனை ஆகாய நீல வர்ணத்தில் ஆங்காங்கே வெள்ளைப் பூக்கள் சிதறி இருந்த அழகான காட்டன் புடவையில் மாநிறமாக இருந்த வெண்பாவை பார்த்த நொடியே லட்சுமிக்கு பிடித்து விட்டது.

  • நிலவை தொலைத்த வானம் – 2.2

    “ஏன் கொடுத்தா என்ன தப்பு? என்னைக்கு இருந்தாலும் நீங்க அடுத்த வீட்டு பொண்ணுங்க, ஆனா இந்த வீட்டுக்கு தலைவன் நான் தான்! எனக்கு தான் அதுக்கு முழு உரிமை இருக்கு..” 

    “தலைவனுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? என்னது உன்கிட்ட பென்ஷன் புக் கொடுக்கனுமா? அப்படி கொடுத்துட்டு நாங்க எல்லாரும் நடுத்தெருவுல நிற்க்கிறதுக்கா? எந்த தைரியத்துல நீ பென்ஷன் புக்கை கேட்கிற? ஏன் அப்பா உன்னை படிக்க வச்சு தன் ஃபிரண்டோட கடையில வேலைக்கும் தானே பேசி வச்சாரு…” என்ற வெண்பாவை வெறுப்போடு பார்த்தான்.

    “ஆனா சேரக்கூடாதவங்க கூட சேர்ந்து உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்ட. இப்ப வரைக்கும் உன் பசங்களுக்கு மட்டுமல்ல உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் சோறு போடுறது அந்த பென்ஷன் புக் தான்! அதை கேட்கிற அதிகாரம் இந்த வீட்ல யாருக்கும் கிடையாது, அது அம்மாவுக்கு உரிமை பட்டது..” என்று கறாரான குரலில் சொன்னவள்,

    “அவங்களுக்கு சுகர் இருக்கு. மாத்திரை வாங்கணும், இன்சுலின் போடணும், செக் அப் ரெகுலரா கூட்டிட்டு போகனும் இதுல எதையாவது ஒன்னு இதுநாள் வரைக்கும் செஞ்சு இருப்பியா?” 

    “இதை செய்யறதுக்கு பென்ஷன் புக் இருக்கணும்னு அவசியம் இல்லை பெத்த பாசம் இருந்தா போதும்..” என்று சொல்ல அது சந்தோஷை பலமாக தாக்கி விட்டது. 

    அதற்கு பதில் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தவன் அற்புதத்திடம், “பொண்ணா வளர்த்து வச்சுருக்க? இதுங்க எல்லாம் எங்க இருந்து மாமியார் வீட்டில் போய் குப்பை கொட்ட போதுங்க?” என்றான் ஆத்திரத்தோடு. 

    “அந்த கவலை உனக்கு வேண்டாம் முதல் உன் குப்பையை நீ அல்லு.. அதுக்கப்புறம் எங்களை பத்தி பேசுவ” என்று அதற்கும் அவன் மூக்கை உடைத்தாள் வெண்பா. 

    வெண்பாவிற்கு பதில் கொடுக்க முடியாமல் தவித்தவன், “கொஞ்சமாவது அண்ணன் என்ற பாசமும் மரியாதையும் இருக்கா? இதோ பார் ம்மா இன்னொரு முறை இவளுங்களுக்காக என் தூக்கத்தை கெடுத்த அவ்ளோதான்!! நடக்கிறதே வேற..” என்று தாயை எச்சரித்தவன், 

    “ச்சை மனுஷன் கொஞ்சமாவது நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டுல?!” என்றவன் மீண்டும் குப்புற படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தான்.

    “ம்மா நம்ம ரெண்டு பேரும் போறதா ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்.. நானும் இன்னைக்கு லீவ் சொல்லிட்டேன், அப்புறம் ஏன்மா?” என்றாள் ஆற்றாமையோடு. 

    “அப்படி இல்லடி.. என்னதான் நீ என் கூட இருந்தாலும் ஒன்னுக்கு ரெண்டு ஆம்பளை பசங்களை பெத்துட்டு ஒருத்தனோட துணையும் இல்லாம போனா நமக்கு கௌரவமாக இருக்காதே..” 

    “ரெண்டு ஆம்பள பிள்ளைங்க இருக்கிறதால இந்த பேச்சு பேசுற, ஒரு வேலை உனக்கு பொண்ணுங்க மட்டுமே இருந்திருந்தால் நீ இதை பேசுவியா?” 

    “அதேதான் வெண்பா நானும் சொல்றேன், வீட்ல ஆம்பள பசங்க இல்லனா அது வேற விஷயம்.. ஆனா ஒன்னுக்கு ரெண்டு பேர் இருந்தும் உங்க அப்பா இல்லாத நிலைல ஒருத்தன் கூட சம்பந்தி வீட்டுக்கு வரலைன்னா எப்படி? அவங்க நம்மளை என்ன நினைப்பாங்க? நமக்குள்ள எவ்ளோ சண்டை சச்சரவு இருந்தாலும் அது அடுத்தவங்க வரைக்கும் போக விடக்கூடாது வெண்பா. 

    “நீ அப்படி நினைக்கிற ஆனா உன் மகன் இன்னிக்கி விடியாததுக்கு முன்னாடியே போட்ட கூச்சல்ல இந்த தெரு மொத்தத்துக்கும் அவனே விஷயத்தை சொல்லிட்டான். இதுக்கு மேல எதை நீ கட்டி காப்பாற்ற போற?”

    “ஏன் ஷோபாவோட மாமியார் வீட்ல இருக்கிறவங்க இங்க இருக்கிற ஆட்கள் கிட்ட பேசவே மாட்டாங்களா அப்படி பேசினா நம்ம வீட்டு வண்டவாளம் தண்டவாளம் ஏறாதா?” என்று கேட்டவள் அங்கேயே நின்றிருந்த பூர்ணிமாவை பார்த்தபடி,

    “இதோ பாரு ம்மா காலம் மாறுது. அதைவிட வேகமா மனுஷங்களோட புத்தி மாறுது.. இப்பல்லாம் யாரும் மனுஷ மனசுக்கு. உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது கிடையாது. பணத்துக்கு தான் கொடுக்கிறாங்க. அப்படி இருக்கும் போது நீ எதுக்காக அதை புடிச்சு கட்டி வைக்கணும்னு நினைக்கிற? இதனால நம்முடைய மன நிம்மதி தான் போகும்..” 

    “கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புதுசுலையே உன்னை நம்பி ஒருத்தி வந்து இருக்கா இனிமேலும் ஊர் சுத்தாம பொறுப்பா இருக்கணும்னு அவனை வேலைக்கு போக சொல்லி அப்பாவிலிருந்து நாம எல்லாரும் எத்தனை போராடி இருப்போம். அவன் எதுக்காவது அசைஞ்சு கொடுத்தானா?” என்று கேட்க “இல்லை” என்றார் அற்புதம். 

    “குழந்தை பிறக்க போகுது இப்போவாவது பொறுப்பு உணர்ந்து நடந்துக்கோனு சொன்னோம், அப்போவே கேட்காதவன் இதுக்கு மேல கேப்பான்னு  நினைக்கிறாயா? விட்டு தள்ளுமா! அவங்கவங்களுக்குன்னு எழுத்து ஒன்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கான் அதை அவங்க அனுபவிச்சு தான் ஆகணும். இன்னொன்னு தெரிஞ்சுக்கோ அதை மாத்துற அளவுக்கு நாம வல்லமை படைத்தவங்க கிடையாது..” 

    “மாத்த நினைச்சா அதுக்கான தண்டனை தான் நமக்கு வந்து சேரும். அவன் பொண்டாட்டிக்கே அந்த அக்கறை இல்ல.. இன்னும் எப்படிடா மாமியார் நாத்தனாரை ஏச்சு பொழைக்கலாம்னு தான் பார்க்கிற இவங்களை திருத்துறதை விட்டுட்டு கிளம்பற வழிய பாரு ம்மா..” 

    “வெண்பா சொல்றது தான் ம்மா சரி. கொஞ்சம் என் கல்யாண வரைக்கும் அவன் வாயில கோலை வைக்காத ம்மா. எனக்கு அடுத்து இவளை கரை ஏத்தணும்னு தினமும் வருத்தப்பட்டா மட்டும் போதாது. என் கல்யாணம் நல்லபடியா நடக்குறதுக்கு வழிய பாரு” என்ற ஷோபனா சமையல் அறைக்கு சென்றாள்.

    இங்கே தன் அறையில் சென்று அமர்ந்த வெண்பாவிற்கு தலைவலி எடுத்தது.

    சுடச் சுட காபி போட்டுக் கொண்டு வெண்பாவைத் தேடி வந்தாள் ஷோபனா.

    “எதுக்காக டி காலங்காத்தால இப்படி ஒரு பிரச்சனை? யார் தொடங்கினது?” என்று எடுத்ததுமே கேட்டாள்.

    “வேற யாரு? எல்லாம் அம்மா தான். அப்பவே நான் வேண்டாம்னு சொன்னேன் என் வார்த்தையைக் கேட்டா தானே?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து விட்டார் அற்புதம்.

    “உன் பெரிய மகன் மட்டும் சொன்ன மாதிரி வந்திருந்தால் இன்னிக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையே கிடையாது…” என்றவளிடம் “இப்போ எதுக்குடி இந்த பேச்சு?” என்றார். 

    “இங்கே நடக்கிறதை பார்க்கிறப்போ வேற என்னம்மா பேச? ஒன்னு இந்தக் கல்யாணத்தை முடிவு செய்வதற்கு முன்னாடி உன் பசங்களை சரிகட்டி இருக்கணும் இல்லையா., அவங்கள வழிக்குக் கொண்டு வந்ததுக்கு அப்புறமா இந்தக் கல்யாண ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கணும்…”

    “இரண்டும் இல்லாமல் இப்படி நட்டாத்துல கொண்டு வந்து விட்ட மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கியே! இதையெல்லாம் பார்க்கும் போது எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கணும்? பேசாம கடைசி வரைக்கும் நானும் உன் கூடவே இருந்திடலாம்னு தோணுது…” என்றாள் ஆற்றாமையோடு.

    “என்ன பேச்சு ஷோபா இது?” என்று வெண்பாவைக் கடிந்தாள்.

    “நல்லா கேளுடி. எப்போ பாரு அபசகுனமா இதையே தான் சொல்றா. அவன் எதுவும் செய்யலைன்னு நீங்க சொல்ற மாதிரி என்னால முழுசா ஒதுக்கிட்டு செய்ய முடியாது.”

    “அப்போ உன் பசங்களை வழிக்குக் கொண்டு வர வழியை பாரு…”

    “அதுக்குத்தான்டி இரண்டு வாரமா அவன் கிட்ட பேசி சம்மதம் வாங்கி வச்சுருந்தேன். ஆனால் திடீர்னு இப்படி வரமாட்டேன்னு சொல்லுவானு நான் எதிர்பார்க்கலை…”

    “ஆனா நான் எதிர்பார்த்தேன்..” என்று ஷோபா சொல்ல அவர்களை இடையிட்டு, 

    “சரி, சரி. இந்தப் பேச்சைத் இத்தோடு விடுங்க. இதுக்கு மேல பேசுறதால என்ன மாறிடப் போகுது? நீ போய் ரெடியாகு ம்மா. நானும் கிளம்பி வரேன். இப்ப பஸ் புடிச்சா தான் பத்து மணிக்கு அங்க போய் சேர முடியும்…”

    “பதினோரு மணிக்கு விசேஷம் சொல்லி இருக்காங்க. அந்த நேரத்துல போய் நின்னா நல்லா இருக்காது. கொஞ்சம் முன்னாடியே போகலாம்” என்று வெண்பா சொல்ல, அவருக்கும் அதுதான் சரியாகப்பட்டது.

    “ம்மா, நான் அவர்கிட்ட ஏற்கனவே நீங்க ரெண்டு பேர்  மட்டும் தான் வருவீங்கன்னு சொல்லிட்டேன்…”

    “எப்போடி சொன்ன?”

    “நேத்து அவர் எனக்குக் கூப்பிட்டு இருந்தாங்க. அப்பவே நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் வருவீங்கன்னு சொன்னேன்…”

    “எதுக்கு ஷோபா?” என்று ஆயாசமாக பார்த்தார் அற்புதம்.

    “எப்படி பார்த்தாலும் உன் ரெண்டு பசங்களும் ஏதாவது சாக்கு சொல்லி வராமல் வீம்பு புடிப்பாங்கன்னு தெரியும். அதனால தான் உன் வார்த்தையை நம்பி வராங்கன்னு சொல்லிட்டு, அப்புறம் இல்லை என்றால் நீ சொன்ன மாதிரி நமக்குத்தான் அசிங்கம். ஒருவேளை திடீர்னு வந்தா சந்தோஷம் தானே? அதனால தான் அப்படி சொன்னேன்…”

    “ம்மா பாசம் உன்னோட கண்ணை மறைக்குது. ஷோபா சொல்றது தான் சரி..” என்று வெண்பா சொல்ல, 

    “பஸ் ஸ்டாப்ல உங்களை பிக்கப் பண்ணிக்க அவர் வரேன்னு சொல்லி இருக்காரு வெண்பா”

    “அதெல்லாம் எதுக்குடி? நாங்களே பார்த்துக்கிறோம்..”

    “அதுதான் நானும் சொன்னேன். ஆனா அது நல்லா இருக்காதுன்னு அவரே வந்து உங்களை ரிசீவ் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்காரு. நீங்க பஸ் ஸ்டாப்புல இறங்குனதும் அவருக்கு ஒரு மெசேஜ் போட்டுடு…” என்று சொல்ல, “சரி” என்ற வெண்பா இன்றைய விசேஷத்திற்கான புடவையை எடுத்து வைத்தாள்.

    அடுத்த அரை மணி நேரத்தில் தாயோடு கிளம்பிச் சென்று அவளது அகாடமியில் பேசி விட்டு பஸ் ஏறினாள்.

    அதேநேரம் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த கௌதம் பரணியின் வீட்டிற்கு காரில் புறப்பட்டிருந்தான்.

  • நிலவை தொலைத்த வானம் – 2.1

    டியூஷன் பிள்ளைகளை அனுப்பி விட்டு வீட்டினுள் வெண்பா வந்த போது சந்தோஷின் சத்தம் இரட்டிப்பாகி போயிருந்தது.

    அற்புதம் காலையிலேயே கண்களில் நீரோடு நின்றிருக்க “எனக்குன்னு ஒரு தொழில் வச்சு கொடுக்க சொன்னேன் பெத்தவங்களா அதை தான் செய்யல சரி, ஆனா அப்பா போன அப்புறம் என் கிட்ட பென்ஷனை கொடுக்க சொன்னேனே அதையாவது குடுத்தியா?”

    “அப்போ எல்லாம் நான் ஆம்பளை பையனா இந்த வீட்டுக்கு எடுத்து செய்ய வேண்டியவனா தெரியல இப்ப மட்டும் தெரியுறேனா?” என்றவனை பரிதவிப்போடு பார்த்தார் அற்புதம்.

    பின்னே! சந்தோஷிற்கு முதல் குழந்தை பிறந்த போதே தமிழ் நேசனிடம் அவனுக்கு ஏதேனும் தொழில் வைத்து கொடுக்க சொல்லி அற்புதம் கேட்டிருந்தார் ஆனால் இன்னும் இரண்டு பெண்களை கரை ஏற்ற வேண்டி இருப்பதால் எந்த பொறுப்பும் அக்கறையும் இல்லாதவனுக்காக சேமிப்பை இழக்க முடியாது என்று அவர் தான் ‘முடியவே முடியாது’ என்று மறுத்திருந்தார். 

    “ஏன்? அதுதான் உன் பெரிய மகனையும் உன் சின்ன மகளையும் வச்சு இதுவரைக்கும் எல்லாத்தையும் நடத்திக்கிட்டியே.. இப்போ மட்டும் நான் எதுக்கு? இதையும் அவங்களை வச்சு நடத்த வேண்டியது தானே?!” என்று கேட்க அற்புதம் பதில் சொல்ல முடியாமல் நின்றார்.

    “என்னைக்கு இருந்தாலும் உனக்கு உன் பெரிய மகன் தான் ஒஸ்தி. ஏன் அவன் மட்டும் என்ன சம்பாதிச்சு மூட்டை மூட்டையா எடுத்துட்டு வந்து உன் கிட்ட கொட்டிட்டா போறான்? இங்க இருந்து தானே மூட்டை கட்டிட்டு போறான்.. அப்படி இருந்தும் அவனை விடாம பிடிச்சு வைக்க தெரியுது. ஆனா என்னை மனுஷனா கூட மதிக்க மாட்டேங்குற..” என்றான் கட்டுக்கடங்கா ஆத்திரத்தோடு.

    “ண்ணா உனக்கு அங்கே போய் வர விருப்பம் இல்லன்னா இல்லைன்னு சொல்லிட்டு போய்கிட்டே இரு.. அதை விட்டுட்டு காலாங்கார்த்தால வீட்டுல பிரச்சனையை ஆரம்பிக்காத. அக்கம் பக்கம் வீடுங்க இருக்கு, உனக்கு கொஞ்சமும் அசிங்கமே கிடையாதா?” என்று பொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டாள் ஷோபனா. 

    “நீ எதுக்குடி இப்போ அனாவசியமா பேசுற? கல்யாணமாக போற பொண்ணு நீ! உனக்கு கூட பொறந்தவங்க எல்லாரும் வேணும், நியாயத்தை பேசுறன்னு எதையும் கெடுத்துக்காதே.. கொஞ்சம் வாயை அடக்கிக்கிட்டு இரு..” என்று அப்போதும் அற்புதம் மகளை தான் கண்டித்தார். 

    “என்ன அத்தை உங்க பொண்ண பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க?! என் புருஷனுக்கு வேலை இல்லைன்னா கேவலமா பேசுவீங்களா? என்ன இருந்தாலும் இவர் உங்க புள்ள அதை மறந்துடாதீங்க.. என்ன செய்ய அவருடைய நேரம் அவருக்கு ஒரு வேலையும் ஒழுங்கா அமையல..” 

    “குறைந்த பட்சம் அவர் கேட்ட மாதிரி நீங்க ஒரு தொழில் வச்சு கொடுத்திருந்தா அவரும் இன்னைக்கு அண்ணி கல்யாணத்தை நீங்க கேட்காமலே எடுத்து செஞ்சிருப்பாரு.. ஆனா ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு நடந்துக்குறீங்க.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா?!”

    “நான் அவனை எதுவும் செலவு செய்ய சொல்லலையே மா விசேஷ வீட்டுக்கு என் கூட வர தானே சொன்னேன், அப்புறம் எதுக்கு பூர்ணிமா இவ்ளோ பேச்சு?!” என்று தாள மாட்டாமல் கேட்டார் அற்புதம். 

    “அதுதான் பிரச்சனையே அத்தை.. அண்ணிக்கு பெண் பார்க்க வந்தப்போ இவரை முன்ன வச்சீங்களா? சீர் செனத்தி இவரை வச்சு பேசினீங்களா?! சரி இதை விடுங்க ஆனா அன்னைக்கு தொழில் வச்சு கொடுக்க மாமா தான் ஆக விடல ஆனா இப்போ பென்ஷன் பணத்தை அவர்கிட்ட கொடுத்து குடும்ப பொறுப்பை எடுத்து செய்ய சொல்லி இருந்தா அவர் என்ன மாட்டேன்னா சொல்ல போறாரு?!”

    “அப்போ எல்லாம் அவரை கண்டுக்காம மட்டும் தட்டிட்டு இப்போ உங்க காரியம் ஆகணும்னு மட்டும் அவரை வர சொல்றீங்க? இது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்டாள் பூர்ணிமா.

    “எப்படி? எப்படி? பென்ஷன் பணத்தை இவன் கிட்ட கொடுக்கணுமா? அப்படி கொடுத்தா அதுக்கும் சூதாடி குடிச்சு அழிச்சிருப்பானே தவிர நீ சொல்ற மாதிரி குடும்பத்தை எடுத்து நடத்துறது ஏன் கல்யாணத்துக்கு செய்யறதுன்னு எதுவும் நடந்திருக்காது..” என்று நிதானமாக கேட்டபடி அவர்களிடையே வந்து நின்றாள் வெண்பா.  

    அவளை கண்டதுமே பூர்ணிமாவின் முகம் மாறி போனது. 

    “ஆமா, அம்மாவும் பையனும் பேசும் போது இடையில  எதுக்கு நீ வர? ஏற்கனவே எரியுற நெருப்புல எண்ணையை ஊத்துற மாதிரி” என்று அவள் நோக்கம் அறிந்தவளாக சூடாகவே கேட்டாள்.

    “நான் இந்த வீட்டு மருமகள்! எனக்கு பேசுற உரிமை இருக்கு அதை கூட இல்லைன்னு சொல்லுவீங்களா?” 

    “இருக்கு. ஆனா, இவ்வளவு தூரம் அண்ணனை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இப்போ நியாயம் பேசிட்டு வரக்கூடாது.. என்னை கேட்டா இந்த நேரத்துல  நீ பேசாம இருக்கிறது நல்லது பூர்ணிமா” என்று ஷோபனா கண்டிக்க அதற்கு கட்டுபாட்டாள் அவள் பூர்ணிமா இல்லையே?!…

    “அதை எப்படி நீங்க முடிவு பண்ணுவீங்க? நான் இந்த வீட்டு மருமக எனக்கு எல்லா உரிமையும் அதிகாரமும் இருக்கு. சொல்லப்போனா உங்களை விட அதிகமா இருக்கு.. இவ்வளவு நாள் அண்ணன்னு அவரை மதிச்சு ஒரு வாய் சோறு போட்டு இருப்பீங்களா? இப்போ உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு அவரோட தூக்கத்தை கெடுத்து பேசிட்டு இருக்கீங்க..” 

    “என்ன பேசுற பூர்ணிமா? யார் தூக்கத்தை கெடுத்தா? ரெண்டு பிள்ளைகளை பெத்து வச்சிருக்கோம் என்கிற அக்கறையும் பொறுப்பும் கொஞ்சம் கூட இல்லாமல் தினமும் மதியம் வரைக்கும் தூங்கிட்டு இருக்கிறவனோட தூக்கத்தை நாங்க கெடுத்துட்டோமா?” என்று வெண்பா கேட்கவும்,

    “கண்டிச்சு வளர்க்காமல் அவரை தூங்க விட்டதே நீங்க எல்லாரும் தானே!” என்று நொடித்தாள் பூர்ணிமா.

    “நாங்க யாரும் வேண்டாம்னு தானே அவன் உன்னை கூட்டிட்டு வந்தான். ஏன் நீ அந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டியது தானே?!” 

    “தொட்டதுக்கெல்லாம் நான் இந்த வீட்டு மருமகன்னு உரிமை கொடி ஏந்திகிட்டு வந்தா போதாது.. இந்த வீட்டு மருமகளா ஆனதே எங்க அண்ணனுக்கு நீ மனைவியானதால தான். அப்போ புருஷனை நல்வழிப்படுத்துற பொறுப்பும் உனக்கு இருக்கு…” 

    “உங்க அம்மா அடிச்சு வளர்த்து இருக்கணும் அப்ப எல்லாம் விட்டுட்டு என்னை கேட்கறீங்க. என்னை என்ன உங்க அண்ணனை திருத்தறதுக்கு நேந்து விட்டு இருக்காங்களா?..” 

    “இதோ பாரு, நாங்க ஒன்னும் பொண்ணு கேட்டு வந்து அவனுக்கு உன்னை கட்டி வைக்கலை. அப்படி வச்சிருந்தா நீ இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம்.. அன்னைக்கு உன்னை கட்டிக்கிட்டு வந்து நின்ன போது பொறுப்பில்லாதவனுக்கு கல்யாணம் எதுக்குன்னு தான் நாங்களும் கேட்டோம்..”

    “அதை மனசுல வச்சு எத்தனை முறை நீ எங்க கிட்ட சண்டை போட்டு இருப்ப. எங்க கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டா எங்க அப்பா இந்த கேள்வியை கேட்பாரோனு தானே எங்க யாருக்கும் சொல்லாம அவன் கல்யாணத்த பண்ணிக்கிட்டு வந்தான்..” 

    “அதுக்கப்புறம் நீயும் என் புருஷனை எனக்கு பார்த்துக்க தெரியும் நீங்க யாரும் தலையிடாதீங்கன்னு சொன்ன அப்புறம் எப்படி நீ இந்த கேள்வியை கேட்கிற?” என்று வெண்பா சரியான இடத்தில் அடிக்க பதில் சொல்ல முடியாமல் நின்றாள் பூர்ணிமா. 

    “நான் திரும்பவும் சொல்றேன், அண்ணனை இவ்வளவு தூரம் நீ பேச விட்டதே தப்பு. அதுக்கும் மேல புருஷ லட்சணத்தை பத்தி இவ்ளோ அழகா சொன்ன நீ அவனை வேலைக்கு அனுப்பி இருக்கலாமே?! அதை ஏன் செய்யலை?”

    “அதை செய்ய சொன்ன நாங்க உனக்கு கெட்டவங்களா தான் தெரிவோம். ஏன் நாங்களா அவனுக்கு சோறு போட மாட்டோம்னு சொன்னோம்?! அன்னைக்கு நீ தானே இனிமேல் இவரை பார்த்துக்க நான் வந்துட்டேன் நீங்க எல்லாரும் தள்ளி இருங்கன்னு எங்களை ஒதுங்க சொன்னது. இப்போ வந்து என்ன பேச்சு பேசுற?” என்றவள் அவளை எளிதில் விடுவதாக இல்லை. 

    வார்த்தைகள் தடிப்பதை கண்டு, “வெண்பா நீயாவது கொஞ்சம் அமைதியா இருடி..” என்றார் அற்புதம்.

    “எங்களையே அடக்கு ம்மா.அப்பவே நான் அவ்ளோ தூரம் சொன்னேன் கொஞ்சமாவது என் பேச்சை கேட்டியா?! பெரியவன் தான் வரலை சின்னவனையாவது கூப்பிடுறேன்னு சொன்ன..”

    “நான் தெரியாம தான் கேட்கிறேன், சொந்த தங்கச்சி மாமியார் வீட்டுக்கு விஷயத்துல கலந்துக்க பத்திரிக்கை வச்சு கூப்பிட்டு அது கூடவே பென்ஷன் புக்கையும் வைக்கணும்னு சட்டமா என்ன? அப்படி எதிர்பார்க்கிறவங்களை நீயும் சரின்னு சொல்லாத ம்மா..” என்று எரிச்சலோடு கேட்டாள் ஷோபனா. 

  • நிலவை தொலைத்த வானம் -அத்தியாயம் 1.2

     

    பிள்ளைகளுக்கு அடுத்த வாரத்தில் இருந்து தேர்வு வர இருப்பதால் இன்றிலிருந்து காலையில் அவர்களுக்கு மாதிரி தேர்வு வைத்து தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள் வெண்பா. 

    கேள்வித்தாள்களைக் கொடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களை  தனித்தனியே அமர வைத்து மற்றவர்களை புத்தகங்களை எடுக்க சொன்ன அதேநேரம், கீழே சந்தோஷின் குரல் உரக்கக் கேட்டது.

    ‘இது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும் இத்தனை காலையில் என்றுமே நிகழ்ந்ததில்லை. இன்று எப்படி?’ என்ற யோசனையில் வெண்பா இருக்க மாணவர்களின் கவனம் சிதறியது. 

    அதை கண்டவள் உடனே கதவை அடைத்து விட்டு, “அமைதியா எழுதுங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த நாளுக்கான கேள்வித்தாளைத் தயாரிக்கத் தொடங்கினாள்.

    அதேநேரம் பெங்களூரின் சர்வதேச விமான நிலையம் வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.

    பயணிகளின் அவசர நடைகள், ட்ராலிகளின் சத்தம், அடுத்தடுத்து ஒலித்துக் கொண்டிருந்த விமான அறிவிப்புகள் என்று அந்த இடமே ஒருவித வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

    அந்தக் கூட்டத்திற்குள் கருநீல முழுக்கை சட்டையும், சந்தன நிற பேண்ட்டும் அணிந்து, கம்பீரமான நடை போட்டு வந்தான் கௌதம் லக்ஷ்மி நாராயணன்.

    ஆறடி உயரத்திற்கு நெருக்கமான கம்பீரமான தோற்றம். 

    எப்போதும் அளவான உடையில், தேவையற்ற அலட்டல் இல்லாமல் இருக்கும் பழக்கம். முகத்தில் அதிகமான பாவனைகள் காட்டாதவன் என்றாலும், அவனுடைய கண்களில் எப்போதும் ஒரு ஆழமான அமைதி இருக்கும்.

    தன்னுடைய கைப்பேசியில் வந்திருந்த சில அழைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்துக் கொண்டே நடந்தவனுக்கு வயது முப்பத்து மூன்று.

    ஆனால் அவனை முதன்முறையாகப் பார்ப்பவர்களுக்கு அந்த வயதை யூகிப்பது கடினம். 

    இருபத்தைந்து வயது இளைஞனைப் போல கட்டுக்கோப்பான உடல், தன்னம்பிக்கை நிறைந்த பார்வை, யாரையும் கவரும் வசீகரமான முகம்.

    அதை விட முக்கியமாக, “நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று சொல்லும் அமைதியான கம்பீரம்.

    பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, தன் திறமையாலும் உழைப்பாலும் கடந்த பத்து ஆண்டுகளில் தன்னுடைய பெயருக்கென்று ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவன் அவன்.

    Civil Engineering முடித்த பிறகு மற்றவர்களிடம் வேலைக்குச் செல்லாமல், தன்னுடைய சொந்த முயற்சியில் கட்டுமானத் துறையில் கால் பதித்தவன்.

    ஆரம்பத்தில் சிறிய கட்டுமானப் பணிகளாக இருந்தது, அதன் பிறகு ஹோட்டல்கள், boutique resorts, luxury villas என்று அவனுடைய தொழில் மெல்ல மெல்ல வளர்ந்தது.

    இப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “Lakshmi Narayanan Hospitality & Properties” என்ற நிறுவனத்தின் Managing Director அவன்.

    அவன் பெற்றோர்களான நாராயணனும் லட்சுமியும் பதினைந்து வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒரே மகன் என்பதாலோ என்னவோ, அவர்கள் மீது கௌதமுக்கு இருந்த பாசம் அளவிட முடியாதது.

    தன்னுடைய வெற்றியை தன்னுடைய பெயரில் கொண்டாடுவதை விட, அதை பெற்றோரின் பெயரில் வைத்திருப்பதில் தான் அவனுக்கு பெருமை. 

    விமான நிலையத்தினுள் சென்ற கௌதமை சுற்றியிருந்த உலகம் எப்போதும் போல் அதன் வேலையைச் அவசரத்துடனே செய்து கொண்டிருந்தது.

    ஆனால் கௌதமுக்கு மட்டும் அவசரம் என்ற வார்த்தையே பழக்கமில்லை. எங்கு சென்றாலும் தன்னுடைய நேரத்தைத் தானே நிர்ணயிப்பவன்.

    வியாபாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால், யாரிடமும் தயக்கம் காட்டாதவன்.

    கோயம்புத்தூர் செல்லும் விமானத்திற்காக பாதுகாப்புச் சோதனைகளை முடித்து விட்டு, போர்டிங் கேட்டின் அருகே சென்று கொண்டிருந்தவன் பின்னே, “ஹேய் கௌதம்!” என்ற குரல்.

    நடையை நிறுத்தி திரும்பியவனின் புருவங்கள் ஒரு நொடி இடுங்கின.

    எதிரே நின்றவனை கண்டு ஆச்சர்யத்தோடு, “ரித்தீஷா…?” என்றான்.

    “இதுல என்ன சந்தேகம்? நானே தான்!” என்று புன்னகையோடு நெருங்கி கௌதமை இறுக அணைத்துக் கொண்டான்.

    “டேய்… எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? எப்படி இருக்கா? எங்க இருக்க? என்ன பண்ற?” என்றான் கௌதம்..

    “நம்ம ஃபிரெண்ட்ஷிப்க்கு வில்லனா என் அப்பாவோட ட்ரான்ஸ்ஃபர் வரும்னு நான் நினைச்சு பார்க்கவே இல்லை.. கடைசியா ஸ்கூல்ல பார்த்தது உன்னை..”

    “ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சா என்னடா அதுக்காக வருஷம் ஒருமுறை கூடவா ஊர் பக்கம் வராம இருப்பீங்க?”

    “என்னடா செய்ய?! காலேஜ் முடிச்சுட்டு வேலை அதை தொடர்ந்து அடுத்தடுத்து தங்கச்சிங்க கல்யாணம் என்னோட கல்யாணம்னு பிஸியாகிட்டேன்.. ஊர் பக்கம் வரணும்னு நினைப்பேன் ஆனா நேரமே அமையலை..” என்றவன் தன்னை பற்றி தன் குடும்பம் குழந்தைகள் பற்றி சொல்ல அதை கேட்டபடி விமானத்தை நோக்கி நகர்ந்தான் கௌதம்.  

    “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கிளாஸ்மேட் சதீஷை சென்னைல பார்த்தேன்.. உன் கூட எடுத்த ஃபோட்டோவை காமிச்சான். உன் நம்பர் வாங்குறதுக்குள்ள அவன் ஒய்ஃப் கூப்பிட்டாங்கன்னு அவசரமா கிளம்பிட்டான்..”

    “என்னை பாரு முப்பத்தி மூணு வயசுக்கெல்லாம் தொப்பையும் தொந்தியுமா இருக்கேன்.. ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் நீ மட்டும் மாறவே இல்லையே! எப்படிடா உடம்பை மெயின்டெயின் பண்ற? எனக்கும் கொஞ்சம் சொல்லேன்..” என்ற ரித்தீஷ் அவனை மேலும் கீழும் பார்த்தபடி கேட்க கௌதம் முகத்தில் மென்னகை.

    “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்?” என்று கேட்டதற்கும் அவனிடம் புன்னகை மட்டுமே.

    மீண்டும் ரித்தீஷ் ஏதோ கேட்க வர அதற்குள் அவனுக்கு அழைப்பு வந்திருந்தது.

    பேசி முடித்தவன், “என்னை பற்றி மட்டும் கேட்டுட்டு இருக்க, உன்னை பற்றி எதுவும் சொல்லலையே.. அப்பா அம்மா எப்படி இருக்காங்க? நீ என்ன பண்ற? எங்க வேலை செய்யற?”

    “லட்சுமி நாராயணன் ஹாஸ்பிட்டாலிட்டி & ப்ராப்பர்ட்டீஸ்..” என்று கௌதம் சொல்ல ரித்தீஷ் சில நொடிகள் அவனைப் பார்த்தபடி நின்றான்.

    “ஒரு நிமிஷம்.. அது உன்னோட கம்பெனியா?” என்றதற்கு கௌதம் அமைதியாகத் தலையசைத்தான்.

    “டேய்! நான் நினைச்சது நீ ஏதாவது பெரிய கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருப்பேன்னு. நீயோ அப்பா அம்மா பேரில் உன்னோட கம்பெனியை ஆரம்பிச்சுட்டியா?”

    “ஆமாடா, படிச்சு முடிச்ச பிறகு எல்லாரும் கேம்பஸ் அட்டென்ட் பண்ணிணாங்க ஆனா அடுத்தவங்க கிட்ட கைகட்டி பதில் சொல்லி ஒவ்வொன்னுத்தையும் கேட்டு செய்யறது எல்லாம் என்னால முடியாது..” என்ற கௌதமின் பிடிவாதம் பற்றி அவனுக்கும் நன்கு தெரியும்.

    அதுவும் அவன் பெற்றோருக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் பல வருடங்கள் கழித்து பிறந்ததாலும் ஒற்றை மகனாக இருப்பதாலும் லட்சுமி நாராயணனின் மொத்த பாசத்திற்கும் அதிபதியானவன் என்றுமே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவன்.  

    அவன் பெற்றோரைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கிப் பழகியதில்லை. அவனுக்கு நினைவு தெரிந்து மூன்றாம் வகுப்பில் இருந்து கௌதம் தான் வகுப்பு தலைவனாக இருந்திருக்கிறான்.

    வகுப்பில் மட்டுமல்ல பெரும்பான்மையான விளையாட்டுக்களுக்கு அவன் தான் தலைமை தாங்கி இருக்கிறான். அப்படிப்பட்டவனால் இன்னொருவரிடம் கைகட்டி நின்று பதில் சொல்லி வேலை செய்வது சாத்தியமே இல்லாத ஒன்று. 

    “எப்படி இதெல்லாம்.. எனக்கு கொஞ்சம் விபரமா சொல்லு” என்று கேட்கவும்,

    “பெங்களூரில் தான் கம்பனியோட ஹெட் ஆஃபிஸ் மச்சி, இப்போ மைசூரில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் Heritage Resort, ஹைதராபாத்தில் Luxury Business Hotel, கோவாவில் கடற்கரையை ஒட்டிய மிகப்பெரிய Resort Project, திருச்சூரில் இயற்கையை மையமாகக் கொண்ட Premium Resort என்று ப்ராஜெக்ட்ஸ் போயிட்டு இருக்கு..” என்றவனை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

    இப்படி ஒவ்வொரு ப்ரோஜக்ட்டும் ஒவ்வொரு நகரத்தில் இருப்பதால் கௌதமின் வாழ்க்கையே பயணங்களால் நிறைந்தது என்றாலும், அவனுடைய பெரும்பாலான வசிப்பிடம் பெங்களூரில் தான்.

    ஒரு ப்ரோஜெக்ட்டின் foundation முதல் handover வரை ஒவ்வொரு விஷயத்தையும் நேரில் கவனிக்கும் பழக்கம் அவனுக்கு இருந்ததால், அலுவலகத்தில் உட்கார்ந்து மட்டும் தொழில் நடத்துபவன் அல்ல.

    “என்னால முடிஞ்சதை நான் பண்ணணும்னு நினைச்சேன்… முதல்ல சின்னதா ஆரம்பிச்சேன், ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமா வளர்த்தேன். இப்ப பல இடங்களிலும் நம்ம ஆஃபீஸ் இருக்கு… இருபத்தி நாலு மணி நேரம் போதலைடா”

    “அதனாலதான் மத்தவங்களை போல உன்னைப் பிடிக்கவே முடியறது இல்லைன்னு சதீஷ் சொன்னானா?!”

    “அதுவும் ஒரு காரணம்…”

    “வேற என்ன காரணம்?”

    “மாசத்துல பாதி நாள் பறந்துட்டு இருப்பேன் டா அதனாலும் என்னை பிடிக்க முடியாமல் போயிருக்கலாம்..” என்று அவன் இலகுவான குரலில் சொல்ல “அடேய்!” என்று ரித்தீஷ் சிரித்தான்.

    “நம்மோட வாழ்க்கை நம்ம கையில்.. நாம நினைக்கிற படி அது இருக்கணும்னா, நாம தான் அதை நல்லா உருவாக்கணும்டா…” என்றவன் வார்த்தைகளில் இருந்த நிதானத்தை ரசித்த ரித்தீஷ்,

    “சரி தொழிலதிபரே… நீங்க சொல்லி நான் அதை மறுக்கவா போறேன்?! அதுசரி இத்தனை வருஷத்துல என்னை மறந்துடலையே?!”

    “உன்னை மறக்குற அளவுக்கு நான் இன்னும் பெரிய ஆளாகல…” என்று சிரித்தான் கௌதம்.

    “அப்போ எவ்ளோ உயரத்துக்கு போனாலும் பழைய கௌதம் இன்னும் இருக்கான்னு அர்த்தம் எடுத்துக்கலாமா?”

    “எனக்கானவர்களுக்காக அவன் எப்பவும் இருப்பான்..” என்று தோளில் கை போட்டுக் கொண்ட கௌதம் ரித்தீஷை ஏர் ஹோஸ்டஸ் வரவேற்றார்.

    இருவருக்கும் ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்க, கௌதம் அருகே இருந்த காலி இருக்கையில் மாற்றி அமர்ந்தான் ரித்தீஷ்.

    பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த நண்பர்களுக்கு பேசுவதற்கு தலைப்பா இல்லை?! 

    பயணத்தின் பாதி நேரத்தை அவர்களின் கல்லூரி நினைவுகளே அக்கிரமித்துக் கொண்டன.

    அப்போது தான் நினைவு வந்தவனாக “டேய் உனக்கு எத்தனை பசங்கன்னு சொல்லவே இல்லையே ?”என்று கேட்டான் ரித்தீஷ்.

    “குழந்தைகளா? என்ன திடீர்ன்னு கேட்கிற?” என்று சிரித்தான் கௌதம். 

    “ஏன் மச்சி குழந்தை இல்லையா? ஏதாவது பிரச்சனையா? யாருக்குனு சொல்லு நமக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க ட்ரீட்மென்ட் பார்த்துக்கலாம்..” என்று சொல்ல அதற்கும் அட்டகாசமான புன்னகை கௌதமிடம். 

    “என்னடா குழந்தை இல்லை என்கிற வருத்தமே இல்லையா உனக்கு? எது கேட்டாலும் சிரிக்கிற..” என்றான் கடுப்போடு. 

    “டேய் குழந்தை பற்றி கேட்பதற்கு முதல் கேள்வியா எனக்கு கல்யாணம் ஆச்சான்னு கேட்டு இருக்கணும் நீ!”

    “என்னடா சொல்ற, அப்போ கல்யாணம் ஆகலையா? ஏன்டா?” 

    “இதுக்கு நான் என்ன பதில் சொல்ல?” என்று அதற்கும் புன்னகைத்தான் கௌதம். 

    “வயசு என்ன ஆச்சு? காலாகாலத்தில செட்டில் ஆக வேண்டாமா? அதுவும் உன் அப்பா அம்மாவுக்கு நீ ஒரே பையன்..” என்றவன் திருமணம், குடும்பம், குழந்தையின் முக்கியத்துவம் என்று தன் போக்கில் வகுப்பு எடுக்கத் தொடங்கி விட்டான். 

    “டேய் டேய் இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய லெக்சர் கொடுக்கிற? எனக்கு கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல மச்சி”

    “என்னடா இப்படி சொல்ற? நம்ம பேட்ச்ல எல்லாருமே குடும்பம் குழந்தைங்கன்னு செட்டில் ஆகிட்டாங்க..” என்றவனை இடையிட்டு,

    “டேய் இப்ப எனக்கு என்ன குறை? நீ சொல்ற மனைவி குழந்தைகள் தவிர்த்து நானும் தான் வெல் செட்டில்ட்” என்று தோள்களை குலுக்கினான்.

    “அப்போ எதனால கல்யாணம் பண்ணிக்காம இருக்குன்னு நீ ஒடச்சி நேரடியா சொல்ல மாட்ட.. இப்படியே மழுப்பிகிட்டு இருக்க போற அப்படித்தானே?!”

    “ஓகே, நேரடியா சொல்லணும்னா இன்னும் என்னோட வாழ்க்கையை பகிர்ந்துக்க கூடிய அளவுக்கு ஒரு பெண்ணை நான் சந்திக்கல போதுமா?!” 

    “அப்போ அப்படி ஒரு பொண்ணு கிடைச்சா கல்யாணம் பண்ணுவியா?” 

    “ஆமா நீ எப்ப இருந்து புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்ச?” என்று அவன் புஜத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டான் கௌதம்.

     “நீ மட்டும் ஓகேன்னு சொல்லு என் வேலையை விட்டுட்டு உனக்காக நானே பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறேன்..” என்றான் அவனும் சிரிப்போடு.

  • நிலவை தொலைத்த வானம் – அத்தியாயம் 1.1

    “சஷ்டியை நோக்க சரவண பவனார்..” என்று முருகன் கோவிலில் இருந்து ஒலித்த கந்த சஷ்டி கவசம் காற்றில் கலந்து அனைவரின் வீட்டிலும் நிறைந்திருந்தது.

    வீடே நிசப்தமாக இருக்க நேரம் அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    குளியல் அறையில் இருந்து தலைக்கு துண்டை கட்டிய படி வெளியேறிய நம் நாயகி வெண்பாவின் இதழ்களும் மெல்ல பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தன.

    முதுகலை பட்டபடிப்பை முடித்து விட்டு அவர்கள் ஊரில் இருக்கும் தனியார் அகாடமி ஒன்றில் பணியாற்றும் இருபத்தி எட்டு வயது நிறைந்த வெண்பா தமிழ்நேசன் – அற்புதம் தம்பதியரின் ஏழாவது குழந்தை. 

    ஆம், வெண்பாவினுடையது மிகப்பெரிய குடும்பம். அவளுக்கு மொத்தம் நான்கு அக்காக்கள் இரண்டு அண்ணன்கள்.

    மூத்தவன் துரைமுருகன் அதன் பிறகு மூன்று பெண்கள் அதன் பிறகு ஒரு ஆண் அதற்கு அடுத்து இரண்டு பெண்கள். 

    இதில் முதல் சகோதரி ஜானகி இரண்டாவது சுசிலா மூன்றாவது சித்ரா பெரிய அண்ணன் துரை முருகன் இளையவன்  சந்தோஷ் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    வெண்பாவிற்கும் அவள் சகோதரி ஷோபனாவிற்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 

    அவள் தந்தை தமிழ்நேசன் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று இருந்த நிலையில், சமீபத்தில் தான் காலமாகி இருந்தார் 

    ஷோபனாவிற்கும் வெண்பாவிற்கும் ஒரு வயது தான் வித்யாசம். ஷோபனாவின் இருபத்தி நான்கு வயதில் வரன் பார்க்க தொடங்கிய போதும் கடந்த ஐந்து வருடங்களாகவே எந்த சம்பந்தமும் தகைத்து வரவில்லை.

    மாப்பிள்ளை வீட்டார் வருவதும் போவதுமாக இருக்கின்றார்களே தவிர்த்து வேலை, ஜாதகம், குடும்பம் என்று ஏதேனும் ஒரு தடையால் எந்த வரனும் அவளுக்கு முடிவதாக இல்லை. 

    மூப்பு ஒருபுறம் மகளின் திருமண கவலை மறுபுறம் என்று தன் இறுதி காலத்தில் அவள் தந்தை படுத்த படுக்கையாகி பூவுலகை விட்டு நீங்கி இருந்தார். 

    அவர்களுடையது பெரிய குடும்பம் என்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் கிடையாது.

    வெண்பாவின் தந்தை தமிழ் நேசன் கடந்த பத்து வருடங்களாவே அவரின் பென்ஷனை கொண்டு ஓரளவு குடும்பத்தை கௌரவமாக காப்பாற்றி வந்தார்.

    அவரின் பெரிய மகன் முழு சுயநலவாதி. 

    பெண் கொடுத்து பெண் எடுத்ததில் ஜானகிக்கு அடுத்து துரைமுருகனுக்கும் திருமணமானது. 

    அடுத்த தங்கைகளை கரையேற்றுவதற்கு தகப்பனுக்கு உதவாமல் தன் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள ஒதுங்கி கொண்டவன், உள்ளூரில் இருந்தால் நிச்சயம் ஊரார் பேசுவார்கள் என்பதால் திருமணமான சில மாதங்களிலேயே வேலையை காரணம் காட்டி வெளியூருக்கு சென்று விட்டான்.

    மாதத்திற்கு இரண்டு முறை குடும்பத்தோடு வந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்து தாய் வீட்டில் சீராடி விட்டுப் போவான்.

    ஆனால் மூத்தவனாக எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ள மாட்டான்..

    அப்படியே அற்புதம் அவர்களுக்கு இருக்கும் கடன் மற்றும் குடும்ப சூழல் குறித்து சொன்னாலும் எதையும் காதில் வாங்காமல் பேச்சை திசை மாற்றுவதில் வல்லவன்.

    கழுவும் மீனில் நழுவும் மீனாக இருப்பவனுக்கு யார் மீதுமே பாசம் கிடையாது. தன் மகிழ்ச்சி, தன் வசதி என்று தன்னை முன்னிலைபடுத்துபவன்.

    உடன் பிறந்த சித்ரா, சுசிலா திருமணத்தை எடுத்து செய்ய வேண்டியவன் நேரத்திற்கு வந்ததும் இல்லாமல் இருநூறு ரூபாய் மொய் வைத்ததை இன்னுமே அவர்களின் புகுந்த வீட்டில் சொல்லி காட்டாத நாளில்லை.

    தந்தை இறந்த போது அனைத்து காரியங்களையும் எடுத்து செய்ய வேண்டிய மகன் வேலையை காரணம் காட்டி மனைவி பிள்ளைகளை மட்டும் அனுப்பி விட்டு இரண்டு நாட்கள் கழித்து தான் ஊருக்கு வந்திருந்தான். இதில் ஷோபனாவிற்கும் வெண்பாவிற்கும் அவன் மீது இருந்த மரியாதையே போய் விட்டது. 

    அதற்கு முன்பும் அற்புதம் ஷோபனாவின் திருமணம் பற்றி பேசினாலே, “உன் பெரிய பையனை நம்பி எதுலயும் இறங்காத ம்மா.. நேரம் காலம் கூடி வந்தா தானா நடக்கும். நாம போட்டிருக்க சீட்டு என்னோட லோன் எல்லாமே கைக்கு வர நாளாகும் அதனால அவசரப்படாத..” என்பாள் வெண்பா. 

    பெரிய மகனைப் பற்றி புரிந்தாலும் அற்புதத்தால் அவனை அத்தனை எளிதாக மற்ற பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து விட முடியாது. 

    அவருக்கு “தாய்” என்ற அந்தஸ்தை முதலில் பெற்றுக் கொடுத்தவன் அல்லவா?!

    அதனால் ஜானகி உட்பட மற்ற பிள்ளைகள் அவன் போக்கை கண்டித்து பேசினாலும் அதை மழுப்பி அவர்களை சமாதானப்படுத்த முயல்வார்.

    ஷோபனா படிப்பு சரியாக ஏறாததால் கல்லூரியில் சேரவில்லை. டைலரிங் கற்று கொண்டதில் வீட்டில் இருந்தே உடை தைத்துக் கொடுப்பது, கூடை பின்னுவது என்று தன் அளவில் குடும்பத்திற்கு உதவுகிறாள்.

    வெண்பா முதல் இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் வேலை செய்து பிறகு அவர்கள் ஊரிலேயே இருக்கும் கோச்சிங் சென்டரில் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறாள். 

    ஷோபனாவின் திருமணம் தள்ளிக்கொண்டு போனதில் முதலில் வெண்பாவிற்கு முடிக்க சொல்லி உறவுகளும் நட்புகளும் அவள் பெற்றோருக்கு சொல்லாமல் இல்லை. 

    ஆனால் வெண்பாவிற்கு பெரிதாக திருமணம் மீது ஈடுபாடு கிடையாது என்பதால் ஒருமுறை அவளின் அத்தை பேசியதை கேட்டு தாயிடம் தன் முடிவை தீர்மானமாக சொல்லி விட்டாள். 

    திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்பதை விட அவளுக்கு  ஆண்கள் மீது நம்பிக்கை சுத்தமாக இல்லை. அதற்கு மிகப்பெரிய காரணம் அவளுடைய அண்ணன்கள்.

    பெரியவன் சுயநலவாதி என்றால் இளையவன் சந்தோஷ் வேறு ரகம்.

    சுத்த பொறுப்பற்றவன். அவனை பள்ளி கல்லூரி படிப்பை முடிக்க வைப்பதற்குள் தமிழ் நேசனுக்கு போதும் போதுமென்றாகி போனது. 

    படிப்பை முடித்து வேலைக்கு சென்று தன் பாரத்தை குறைப்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்க அவனோ நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையும் தன் வாழ்வை அனுபவித்து வாழ்வதையும் வழக்கமாக கொண்டிருப்பவன். 

    சொல்லப்போனால் அவன் மனைவி பிள்ளைகளின் பொறுப்பையே உணராதவன்.

    ‘பொறுப்பை ஏற்க தயாராக இல்லாதவனுக்கு திருமணம் தான் ஒரு கேடு’ என்று ஷோபனாவும் வெண்பாவும் சொல்லிக் காட்டிய போதும் அவன் திருந்துவதாகவே இல்லை.

    ஆம் வயதுக்கு வந்த இரு தங்கைகளை வைத்துக்கொண்டு அவனுக்கு முதலில் துணை தேடிக் கொண்டவன்.

    சந்தோஷ் பூர்ணிமாவுடையது காதல் திருமணம்.

    எப்போதும் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கண் விழிப்பவன் ஒரு நாள் அதிசயமாக அதிகாலையே எழுந்து குளித்து முடித்து வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்.

    வீடே அதை அதிசயமாக பார்த்திருந்தது. 

    என்னவாக இருக்கும் என்று புரியாமல் தமிழ்நேசன் இருக்க, ‘ஒருவேளை புத்தி வந்து வேலை தேடி கிளம்பிவிட்டானோ?! தன் மகனுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது..’ என்று சந்தோஷத்தில் பூரித்து போனார் அற்புதம். 

    ஆனால் சந்தோஷ் மீண்டும் திரும்பிய போது கழுத்தில் மாலையோடு அவன் மனைவி பூர்ணிமாவின் கையை பிடித்தபடி வாசலில் நின்றிருந்தான்.

    அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, ‘தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தாலி கட்டிய பின்னர் என்ன செய்ய முடியும்?’ அதனால் தமிழ் நேசனால் எதுவும் பேச முடியவில்லை.

    ஊரே வேடிக்கை பார்த்ததில் எதுவும் பேசாமல் அவர்களை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் பெண் வீட்டார் காவல்துறையில் கம்பளைண்ட் செய்து பெரிய கலவரமே செய்து விட்டனர்.

    இருவரும் மேஜர் என்பதாலும் தூரத்து சொந்தம் என்பதாலும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் கிளம்பி விட்டனர்.

    பெண் வீட்டாரருக்கு இவனின் பொறுப்பற்ற தன்மையும் ஊதாரித்தனமும் நன்கு தெரிந்ததால் மகளிடம் எத்தனையோ பேசிப் பார்த்தனர் ஆனால் அவள் மசிவதாகவே இல்லை.

    இறுதியில் ‘எக்கேடு கெட்டுப் போ! எங்கள் வீட்டு வாசப்படியை மட்டும் மிதிக்காதே’ என்று சொல்லி அவளை அங்கேயே தலை முழுகி சென்று விட்டனர்.

    இந்த இருவரையும் பார்த்து வளர்ந்த வெண்பாவுக்கு,

    “திருமணம் என்றால் ஒரு பெண் இன்னொரு குடும்பத்தில் வாழ்க்கையைத் தொடங்குவது” என்ற எண்ணத்தை விட, “ஒரு பெண் தன் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட வேண்டியதா?” என்ற கேள்வி தான் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

    தன் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே தங்களுடைய பொறுப்புகளைத் தட்டிக்கழித்ததைப் பார்த்துப் பார்த்து, ஒரு ஆணை நம்பி வாழ்க்கையை ஒப்படைப்பதன் மீதே அவளுக்கு ஒருவித அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது.

    மருமகளின் ஒன்றுக்கு இரண்டு பிரசவத்தையும் அற்புதம் தான் பார்த்தார்.

    பிள்ளைகளை பெற்றது வேண்டுமானால் பூர்ணிமாவாக இருக்கலாம்.. ஆனால் வளர்த்தது என்னவோ ஷோபனாவும் வெண்பாவும் தான்.

    பூர்ணிமா முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்திருந்த போதே காதல் வயப்பட்டு இவனோடு கிளம்பி வந்து விட்டவள். அவளுக்கு பெரிதாக படிப்பில் ஆர்வமும் கிடையாது. 

    படிப்பு மட்டுமல்ல சமையலும் சுத்தமாக வராது. வீட்டு வேலை செய்வதற்கு கூட நாத்தனார் உடன் மல்லுக்கட்டி தினம் ஒரு பஞ்சாயத்தை இழுத்து வைப்பாள்.

    இந்த லட்சணத்தில் சந்தோஷின் குடும்பத்திற்கும் சேர்த்து வெண்பாவும் அவள் தாயும் தான் சோறு போட வேண்டும். 

    காலை அவள் எழவே ஏழு மணியாகிவிடும். கேட்டால் பிள்ளைகளை காரணம் சொல்லி ஒப்பாரி வைத்து சண்டைக்கு வழி வகுப்பாள். 

    அதனால் அதிகாலை கோலம் போடுவதில் தொடங்கி சமையல் வரை யாரும் அவளை எதிர்பார்க்க மாட்டார்கள். அவளாக எழுந்து வந்து குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாத்திரம் கழுவது வீடு கூட்டுவது என்று செய்தால் போதும் என்று விட்டு விடுவார்கள்.

    எப்போதும் ஐந்து மணிக்கு எழுந்து கொள்ளும் வெண்பா இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் நேற்று சீக்கிரம் உறங்கி விட்டதாலும் அலாரம் அடிக்கும் முன்பாகவே எழுந்து விட்டாள். 

    குளியல் அறையில் இருந்து அவள் திரும்பிய நேரம் சரியாக அலாரம் அடிக்க ஷோபனாவின் உறக்கம் கெட வேண்டாம் என்று அவசரமாக அதை நிறுத்தியவள் கண்ணாடி முன் சென்று நின்றாள். 

    தொடர்ந்து வேலைகள் காத்திருக்கும் நிலையில் வெண்பாவிற்கு நிதானமாக அலங்காரம் செய்ய நேரமில்லாது நெற்றியில் ஒரு பொட்டை மட்டும் எடுத்து ஒட்டிக்கொண்டு வெளியில் சென்றாள். 

    தெருவில் இன்னும் முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருக்க, ஒரு சில வீடுகளில் மட்டும் விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. 

    இப்போதெல்லாம் குளிர் காலமாக இருந்தால் முந்தின நாள் இரவே வாசல் தெளித்து கோலமிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் அதிகாலை வாசல் தெளித்து கோலமிடும் வழக்கத்தை மட்டும் வெண்பா மாற்றி கொள்ளவில்லை.  

    பென்ஷன் மட்டுமில்லாமல் அற்புதம் இரண்டு மாடுகளை வளர்க்கிறார். பின்னிருந்த மாட்டு கொட்டகைக்கு சென்ற வெண்பா மாட்டை பிடித்து கட்டிவிட்டு, கொட்டகையை சுத்தம் செய்து சாணத்தோடு முன் வாசலை நெருங்கினாள். 

    அதிகாலை குளிரில் முகத்தை தழுவிய காற்றை ரசித்தபடி, சாணத்தை தண்ணீரில் கரைத்து வாசல் தெளித்து பெருக்கியவள் அரிசி மாவில் அழகாக கோலமிட தொடங்கினாள். 

    வெண்பாவின் அலட்டல் இல்லாத அழகு, அவசரம் இல்லாத செயல்பாடு யாரையும் அவள் பக்கம் ஈர்த்துவிடும். 

    கோலத்தை முடித்து விட்டு எழுந்த வெண்பா, அடுத்து துளசி மாடத்திற்கு தண்ணீர் ஊற்றினாள்.

    “வெண்பா…” என்று உள்ளிருந்து அவளுடைய அம்மாவின் குரல் கேட்கவும், “இதோ வரேன் ம்மா…” என்றபடி உள்ளே சென்றவள், சிறிது நேரத்தில் கையில் ஒரு சிறிய தட்டுடன் வெளியே வந்தாள்.

    துளசிக்கு விளக்கேற்றி வணங்கிவிட்டு, திரும்பிய நேரத்தில் தெருவின் முனையிலிருந்து சைக்கிள் மணி சத்தம் கேட்டது.

    பிள்ளைகள் வந்துவிட்டதை உணர்ந்தவள் வாசலை ஒட்டி இருந்த படிக்கட்டின் கதவை திறந்து விட்டாள்.

    அதை தொடர்ந்து அவளிடம் டியூஷன் படிக்கும் மாணவ மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக அங்கே வந்து சேர்ந்தனர். 

    அகாடமியில் வேலை செய்வதோடு அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் டியூஷனும் எடுக்கிறாள். 

    அதில் கணிசமான தொகை வர அதை அப்படியே அண்ணன் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு என்று தனியாக எடுத்து வைத்து விடுவாள். 

    “எல்லாரும் மேல போய் உட்காருங்க. நான் வந்துடுறேன்..” என்றவள் அற்புதம் கொடுத்த காஃபியை அவசரமாக குடித்து விட்டு மாடிக்கு சென்றாள். 

    துரைமுருகனுக்காக தமிழ் நேசன் கட்டி கொடுத்த ஒற்றை அறையில் தான் இப்போது அவள் டியூஷன் எடுப்பது. 

    ‘அது எப்படி என்னுடைய அறையை நீ பயன்படுத்தலாம்?’ என்று அவன் அதற்கும் பிரச்சனை செய்ய அற்புதம் தான் இடையிட்டு அதை தீர்த்து வைத்தார். 

    அதன்படி துரைமுருகன் வரும் வார இறுதி நாட்களில் குழந்தைகளுக்கு தேர்வு இல்லை என்றால் டியூஷனுக்கு விடுமுறை கொடுத்து விடுவாள்.

    ஒருவேளை முக்கிய பரீட்சை இருந்தால் பின்பக்கம் அழைத்து சென்று சொல்லி கொடுத்து அனுப்பி விடுவாள்.

    தந்தை இன்றி தனியாக குடும்ப பொறுப்புகளை சுமக்கும் தாயின் பாரத்தை குறைப்பது மட்டுமல்ல அவரின் மனநிம்மதியையும் கருத்தில் கொண்டு பல நேரம் அதிகம் வாதிடாமல், வீட்டை போர்க்களமாக்கி தான் நினைத்ததை சாதிக்க நினைக்கும் அண்ணன்களிடம் அனுசரித்து போய் விடுவாள் வெண்பா.